காங்கிரஸ் கட்சி தன்னை கிளார்க் போல் நடத்தியதாக கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி தான் காரணம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் சித்தராமையா புகார் கூறி இருந்தார். இதுதொடர்பாக பேசிய குமாரசாமி, 14 மாதங்கள் தாம் முதலமைச்சராக இருந்ததாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியால் தாம் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. தனது முகத்தில் தாள்களை வீசி எறிந்ததாகவும் தெரிவித்துள்ள குமாரசாமி, எவ்வளவு நாள் தான் அடிமையாக இருப்பதை விரும்ப முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அரசை நடத்தியது சித்தராமையா தான் என்று குற்றம்சாட்டியுள்ள குமாரசாமி, இந்த அரசியலால் வெறுப்படைந்து விட்டதாக கூறியுள்ளார்.
பாஜகவைக் காட்டிலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை, பெரிய எதிரி போல் காங்கிரஸ் கருதியதாக தெரிவித்துள்ள குமாரசாமி, தன்னை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு சித்தராமையா முயற்சி மேற்கொண்டதாகவும், இதுதொடர்பாக நேரடி விவாதத்திற்கு தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.
.....